Monday, October 11, 2010
நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...
நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில். அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர்தான் பகவான் ஸ்ரீ ஹரி ஸ்வாமிஜி அவர்கள். கிருஷ்ண பக்தரான ஹரி ஸ்வாமிகள் பகவத்கீதையைக் குறித்த விளக்கத்தை பல்லாண்டு காலமாக மேத்தா நகரில் இருக்கும் அவரது பிருந்தாவனத்தில் நிகழ்த்தி வருகிறார். இது மட்டுமல்லாமல், ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கவுரை நூலும், நவ துர்கா மந்திர ஸ்லோகம், ஸ்ரீலக்ஷ்மி ஸ்லோகம், பகவத்கீதை விளக்கவுரை நூல் என பல்வேறு நூல்களும் எழுதி, அதை பக்தி சிரத்தையுடன் படிக்கும் பக்தர்களுக்கு இலவச வெளியீடாகவும் தந்து தொண்டாற்றி வருகிறார். அண்மையில் 8.10.2010 நவராத்திரி முதல் நாளன்று மாலை, மயிலை வெங்கடேச அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகா ஹாலில் ‘நவராத்ரி நவதுர்கா தேவியின் மஹோத்ஸவ மஹிமை’ என்ற தலைப்பில் அருளுரை ஆற்றினார். இந்த அருளுரை நிகழ்ச்சி 2 மணி நேரத்துக்கு நடந்தது. சுவாமிஜி அவர்கள் ஒவ்வொரு துர்கையைப் பற்றி விளக்கிக் கூறும்போதும், அந்தந்த துர்கைக்கு உரிய கோலத்தில் சிறுமிகளை அலங்கரித்து மேடைக்கு அனுப்பிவைத்த நிகழ்வு பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இனி, நவதுர்கைகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்:
உலக உற்பத்தியின் காரணியான ஜெகன்மாதா துர்காதேவியின் அவதார லீலா விநோதமே நவதுர்கா வெளிப்பாடு. வருஷ ருது காலத்தில், புரட்டாசி மாத சுக்லபட்சத்தில் முதல் ஒன்பது நாட்களில், ஓங்கார நாதத்வனியாக அனைத்திலும் வ்யாபித்து அருள்பாலிக்க, வன துர்கா, சூலினி துர்கா, ஜாதேவதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸுரி துர்கா என ஒன்பது சக்திகளாகப் பிரிந்து, விஜயதசமியன்று ஜெயம் கொண்டு, அந்த ஜெயத்தை நமக்கும் தருவதற்காக நம் இல்லம்தோறும் விஜயம் செய்பவளான அன்னையை பூஜிப்பதனால், ஸர்வ பாப நிவர்த்தி, க்ரஹ தோஷ நிவர்த்தி, தீராத ரோஹ நிவர்த்தி, விவாஹ ப்ராப்தி, குடும்ப க்ஷேமம், தாம்பத்திய ஒற்றுமை, ஆயுள் ஆரோக்கிய ப்ராப்தி, புத்ர ப்ராப்தி, வித்யா ப்ராப்தி, உத்யோக ப்ராப்தி, அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி மற்றும் ஸகல காரிய சித்திகளும், ஸகல சௌபாக்கியங்களும் இகபர சுகங்களும் ஏற்படும்.
நவராத்திரியில் மட்டுமல்லாது, ஒவ்வொரு அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது தினங்களிலுமே மாலையில் இந்த நவதுர்கையரை வழிபட்டு பலன் பெறலாம். தசமி திதியான பத்தாம் நாளன்று சாமுண்டி துர்கையை வழிபட்டு பேரின்பப் பெருவாழ்வை அடையலாம்.
அந்த நவதுர்கா தேவியரின் லகு பூஜா முறைகளை இமேஜ் வடிவத்தில் தந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். மேலும் விவரங்கள் தேவையெனில், சந்தோஷ் 98849 79899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment