Friday, May 09, 2008

ஹெல்த் பிட்ஸ் . . .

சிறுநீர் சுய பரிசோதனை . . .

உங்கள் சிறுநீரை நீங்களே பரிசோதித்தறிவது என்பது நல்ல விஷயமாகப் படவில்லையென்றாலும், உங்கள் உடல்நிலையில் வறட்சி உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு உண்மையிலேயே இது உதவக்கூடியது.
பிரிட்டிஷ் பேராசிரியர் ஒருவரின் கூற்றுப்படி நீங்கள் காலையில் முதலில் வெளியேற்றும் சிறுநீரானது மங்கலான வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன்பின்னரும் நீங்கள் வெளியேற்றும் சிறுநீர் தொடர்ந்து அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் தண்ணீரை அருந்தவேண்டும்.
உங்கள் உடல்நிலையில் சிறிதளவேதான் வறட்சி என்றாலும், இது உங்களுடைய மன ஒருமையைச் சிதறடிப்பதுடன், தலைவலியையும் சோர்வையும் உண்டாக்கவல்லது. மேலும், இது குடல் சம்பந்தமான மலச்சிக்கலையும் ஏற்படுத்த வல்லது. கோடை காலத்திலோ மலச்சிக்கல் பிரச்னை குறித்து சொல்லவேண்டியதே இல்லை. நன்கு குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும்கூட!
சாதாரணமாகவே நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் நீர் அருந்தி வந்தாலும், நல்ல கோடையிலோ அல்லது உடல் வெப்பம் அதிகமாக இருக்கும்போதோ இதற்கு மேலும் நீரை அருந்தவேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிலும் உணவு உட்கொள்கையில் நீரையும் கட்டாயம் அருந்தவேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு சிறிதும், பயிற்சியை முடித்த பிறகு நிறைய தண்ணீரும் குடிப்பது நல்லது.
தர்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் உலர்ந்த விதைப் பழங்களில் இருக்கும் நீர்கூட வறட்சியைப் போக்கும்.

மரங்களோடு வாழ்பவர்களுக்கு ஆரோக்கியம் அதிகம்!

பச்சைக் காய்கறிகளை உண்பதால்தான் நான் உடல்நலத்துடன் இருக்கிறேன் என எண்ணுபவரா நீங்கள்?
ஒரு ஆராய்ச்சியோ இன்னும் வேறுசில காரணங்களையும் பட்டியலிடுகிறது. அந்த ஆராய்ச்சியின்படி மரங்களுக்கு அருகாமையில் நீங்கள் வாழ்பவர்களாக இருந்தால் - நகரங்களில் இருந்தாலும்கூட - உங்கள் உடல்நலம் நன்றாக இருக்குமாம்.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் டோக்கியோ நகரைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் பூங்கா அருகிலும், மரங்கள் சூழ்ந்த தெருக்களிலும் அவர்கள் வசித்ததால் - வயது, பாலுறவு, திருமணம் மற்றும் சமூக பொருளாதாரச் சூழல்கள் அவ்வளவாக அவர்களைப் பாதிக்கவில்லையாம். அதனாலேய அவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தனர்.
இவ்விதச் சூழல்களை அதிகரித்தால், நல்ல உடல்நலத்தைப் பெறுவதுடன் மேலும் சிறப்பாகச் செயல்படலாமே என்று ஆராய்ச்சியாளர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். நாமும் சற்றே சிந்திப்போமா?

டை கட்டுபவர்களே, உஷார்!


“என் கால்களே என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது’ எனக் கூறும் பெண்களில் பலர் ஹை-ஹீல் செருப்புகளை அணிபவர்களாக இருக்கிறார்கள். இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தென்படலாம். பொதுவாகவே நாகரிகம் வளர வளர நோய்களும் வளரும்தான் போலிருக்கிறது. பிரச்னை தரும் சில பொதுக்கூறுகளைப் பார்ப்போம்.
கழுத்தில் மிக நெருக்கமாக டை அணிபவர்களுக்கு, கண்களில் அழுத்தம் அதிகரிப்பதுடன், கண்விழி விறைப்பு நோய்க்கும் அடிகோலுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஹை-ஹீல் ஷூ அணிபவர்களுக்கு முழங்காலில் எலும்பு மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் என்கிறார்கள்.
இறுக்கமாகப் பேண்ட் அணிபவர்களுக்கோ நெஞ்செரிச்சலில் கொண்டுபோய் விடுமாம். ஆனால் நாமோ, செரிமானப் பிரச்னையால் நெஞ்செரிச்சல் என எண்ணுவோம்.

விரும்பிச் செய்யும் செயலால் வாதம் வருவது குறைவு!

தோட்டப் பராமரிப்பு, அஞ்சல் தலை சேகரிப்பு போன்று பல வித்தியாசமான விருப்பவேலைகளில் ஓய்வுநேரத்தில் ஈடுபடுபவரா நீங்கள்? உங்கள் பதில் ஆம் எனும் பட்சத்தில், அதை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள். இவ்வித விருப்பவேலைகள் கூட நம் உடல்நலத்தையும் மனவளத்தையும் பேணிக் காக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லை!
டெபி பேகர் என்பவர், 3000-க்கும் மேற்பட்ட பர்ஃபி பொம்மைகளை - கடைசியாக எண்ணியபோது சேர்த்திருக்கிறாராம். இது என்ன இப்படியும் ஒரு பழக்கமா? என நம்மில் பலர் வித்தியாசமாக நினைக்கலாம். இருந்தாலும் இம்மாதிரியான தனிப்பட்ட உற்சாகங்களே வாழ்வில் நன்மை பயக்கவல்லவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
விரும்பிச் செய்யும் செயல்களால் ஒருவரது மன அழுத்தம் பெருமளவில் குறைகிறது என்கிறார் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பெண்கள் நலத்திற்கான மன/உடல்நல மையத்தின் இயக்குநர் டோமர். இச்செயல்களால் அன்றாடக் கவலைகளிலிருந்து விடுதலை கிடைப்பதுடன், அமைதித் தன்மையும் நம்மில் குடியேறுகிறது என்கிறார் இவர்.
ஜப்பானில் 12,000 மனிதர்களிடையே நடத்திய ஆய்வில், விரும்பிச் செய்யும் வேலையிலோ சமூக சேவைகளிலோ தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு ஸ்ட்ரோக் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் - மற்ற மனிதர்களைக் காட்டிலும் மிகக் குறைவாகவே வருவதாகக் கண்டுள்ளார்கள்.
எனவே, எந்த வேலையாயினும் ஒன்று அதை விருப்பவேலையாக மாற்றிக்கொள்வோம். வாழ்வுக்கு அர்த்தம் தரக்கூடிய வகையில் நமக்கு மிகவும் விருப்பமான விஷயங்களுக்கு ஓய்வுநேரத்தை ஒதுக்குவோம்.


சரியான நேரத்துக்கு சரியான மருத்துவம் தேவை!

சரியான நேரத்துக்கு ஓர் உதவி கிடைக்கிறதெனில், காலத்தினால் செய்த இந்த உதவியை காலத்துக்கும் மறக்கமாட்டேன் எனக் கூறுவது நம் வழக்கம்.
நாம் நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளுக்கும்கூட நேரம் காலங்களைப் பார்க்கவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆய்வின்படி ஒருவரது உயிரியல் கூறுகளுக்கு ஏற்றாற்போல், நோயாளிக்கு தகுந்த நேரத்தில் உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகள் பலவிதங்களில் பயனளிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உச்சநிலையை அடைவது நாம் எழும் காலை நேரங்களில்தானாம். இதனால்தான் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை காலை வேளையில் 6 மணிக்கும் மற்றும் பகல் வேளைகளிலும் நோயாளியைத் தாக்குகிறது.
இதற்கு மருத்துவரிடம் கலந்தாலோசித்து புதிய ரத்த அழுத்த மருந்துகளை இரவு வேளையில் எடுத்துக்கொண்டால், குறிப்பாக இதுபோன்ற காலைவேளைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
ஆஸ்துமா அறிகுறிகள் அதிகம் தென்படுவது அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில்தானாம். அட்ரீனலின் மற்றும் கார்டிசால் ஹார்மோன்களின் அளவு உடலில் இந்நேரங்களில் குறைவதாலேயே இவ்விதம் நேருகிறதாம். இந்நேரங்களில் காற்று வரும் வழிகளைத் திறந்து வைத்திருத்தல் நலம் பயக்கும். இதற்குரிய மாத்திரைகளை மதியம் 3 மணி அளவில் எடுத்துக்கொண்டால் நோயின் தீவிரம் குறையும்.
எலும்பு சார்ந்த மூட்டுவீக்கம் உடையவர்களுக்கு பொறுக்கமுடியாத வலியானது, சிலருக்கு காலையில்தான் ஏற்படுமாம். இதற்கு மாத்திரைகளை இரவிலேயே எடுத்துக்கொள்வது நல்லது. மாலையில் வலி உள்ளவர்கள், பகலிலேயே மாத்திரைகளை உட்கொள்வது நலம் பயக்கும்.

Sunday, April 13, 2008

ஸ்ரீராம நவமி - ஸ்ரீராமர் ஜாதகத்துடன்...

ஸ்ரீராம நவமி - ஸ்ரீராமர் ஜாதகத்துடன்...

14/04/2008.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ

நக்ஷத்ரே(அ)திதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்த்தேஷு பஞ்சஸு க்ரஹேஷு கர்க்கடே லக்நே வாக்யதா விந்துநா ஸஹ
ப்ரோத்யமாதே ஜகந்நாதம் ஸர்வலோக நமஸ்க்ருதம்

கௌஸல்யா(அ)ஜநயத் ராமம் ஸர்வலக்ஷண யம்யுதம்

- ஸ்ரீ வால்மீகி ராமாயணம

ஸ்ரீ ராமர் ஜாதகம்

சுக்கிரன்

சூரியன் புதன்

கேது

ராசிச் சக்கரம்

லக்னம் குரு சந்திரன்

செவ்வாய்

ராகு

சனி

மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐசுவரிய அபிவ்ருத்தியும் ஆயுள் அபிவ்ருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்.

ராமனும் ராமாயணமும்!

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.

ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.
ஓர் இல் - ஒரு மனைவி.
ஒரு சொல் - வாக்குத் தவறாமை.
ஒரு வில் - குறி தவறாத ராம சரம்.

'ராமன்' என்றாலே தானும் ஆனந்தமாக இருந்து மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனைவிதமான துக்கங்கள் வந்தபோதிலும் மனத்தைத் தளரவிடாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துவந்தவர்.

சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனத்தின் சஞ்சலங்கள் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இதனால் மனத்தில் எப்போதும் ஆனந்தம் லேசாக இருக்கும்.

ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது மிகவும் முக்கியம். அது இறைவனாகவே இருந்தாலும், அவன் மனித உருவில் வந்தாலும் என்பதைத்தான் ராமாயணம் வலியுறுத்துகிறது.

ஒரு சமயம் லக்ஷ்மணன் ராமனிடம், 'தர்மம் தர்மம் என்று அதை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதால்தானே இத்தனை துன்பப்படுகிறோம்? பேசாமல் அதை விட்டுவிட்டால் என்ன?' என்று கேட்க, ராமன் அதைப் பொருட்படுத்தாது இருந்தான். கடைசியில் அந்தத் தர்மம்தான் அவர்களைக் காத்தது. ராவணனுக்குப் பத்துத் தலைகள் இருந்தும் அவன் தர்ம வழியில் செல்லவில்லை. எனவே, அவனது அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன.

ஆதிசங்கரர், சிவவாக்கியர் முதலான மகான்களில் இருந்து சமீப காலக் கவிஞர்கள் வரை அனைவராலும் போற்றப்பட்ட அவதாரம் ஸ்ரீராமாவதாரம். விசிறிச் சாமியார் என்றழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாருக்கு அவர் குரு பாபா ராம்தாஸ் 'ஓம் ஸ்ரீராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்' என்ற ஸ்ரீராம நாம மந்திரத்தைத்தான் உபதேசித்தார்.

மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் மூல ராமரைத்தான் ஆராதித்தார்.
ஸ்ரீராகவேந்திரரிடம் சில பக்தர்கள், 'பல்வேறு கடவுள்கள் இருக்க, நீங்கள் மூல ராமரையே ஏன் துதிக்கிறீர்கள்?' எனக் கேட்டார்கள். அதற்கு ராகவேந்திரர்,
'நிறையக் கடவுள்களைக் கும்பிட்டால் இவரைவிட அவர் உயர்ந்தவரோ என்ற தேவையற்ற பேதங்கள் தோன்றும். எல்லாக் கடவுள்களும் ஒன்றே என்ற உண்மை புரியாமல் போகும். இதைத் தவிர்க்கவே நான் மூல ராமரையே ஆராதிக்கிறேன்' எனச் சிரித்தவாறே பதில் அளித்தார்.

பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய மூவரிடம் மட்டுமல்லாமல் படகோட்டியான குகன், வானர இனத்தைச் சேர்ந்த சுக்ரீவன் மற்றும் அரக்கர் குலத்தைச் சார்ந்த விபீஷணன் ஆகியோரிடமும் பகைமை பாராட்டாமல் சகோதர பாவத்தில் பழகியவர்.

இந்திய இதிகாசமான வால்மீகி இராமாயணத்தைத் தழுவி பல்வேறு இராமாயணங்கள் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளன.

நாரத மகரிஷி வால்மீகிக்கு சுருக்கமாகச் சொன்ன ராமாயணமே ஸங்க்ஷேப ராமாயணம். ராமாயணம் பல வடிவங்களில் இருக்கிறது. அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

காயத்ரீ ராமாயணம் - ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இந்த காயத்ரீ ராமாயணமோ இருபத்து நான்கு எழுத்துகள் கொண்ட காயத்ரீ மஹாமந்திரத்தின் ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோர் ஆயிரத்தின் முதல் எழுத்தாக அமைத்து 24 ஸ்லோகங்களில் அமைக்கப்பட்டதாகும். இதைத் தினமும் பாராயணம் செய்தால், வால்மீகி ராமாயணத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன், காயத்ரீ மந்திரத்தை ஜபித்த பலனும் கிடைக்கும்.

ஏகஸ்லோகி ராமாயணம் - பின்வரும் இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தாலே ராமாயணம் முழுவதும் பாராயணம் செய்த பலன் உண்டாகும்.

ஆதௌ ராம தபோவநாதி கமநம் ஹத்வா ம்ருகம் காஞ்சநம்
வைதேஹீ ஹரணம் ஜடாயுமரணம் ஸுக்ரீவ ஸம்பாஷணம்
வாலீ நிக்ரஹணம் ஸமுத்ரதரணம் லங்காபுரீ தாஹநம்
பஸ்சாத்ராவண கும்பகர்ண நிதநம் த்வேதத்தி ராமாயணம்

ஸ்ரீ நாம ராமாயணம் - ஸ்ரீ ராமபிரானுடைய புகழைப் பாட உதவும் ராமாயணம். ஒவ்வொரு நாமத்தின் முடிவிலும் ராம என்று முடியும் ராமாயணம். ராம நாமமும் ராமாயணக் கதையும் ஒன்றன்பின் ஒன்றாக வருவதால், ராமாயண பாராயணமும் நாம ஜபமும் ஒருங்கே செய்த திருப்தி கிடைக்கிறது. இந்த ஸ்ரீ நாம பாராயணம் மத்வஸ்ரீ பண்டிட்லக்ஷ்மணாச்சாரியார் என்ற மஹான் இயற்றியதாகும். இதைப் பாராயணம் செய்வதால் சரீர வியாதியும் மனோ வியாதியும் தீரும்.

திவ்யப் பிரபந்த பாசுர ராமாயணம் - ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்னும் மாமுனிவர் இந்த ராமாயணத்தை இயற்றி அருளினார். பன்னிரு ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த பாசுரங்களிலுள்ள பதங்களையே தொகுத்து இவர் ராமாயணமாக அருளியிருக்கிறார். இதை அநுதினமும் பாராயணம் செய்தால் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் ராமாயணத்தையும் பாராயணம் செய்த பலன் ஒருங்கே கிடைக்கும்.

ஸ்ரீ ராமாயண சங்க்ரஹம் - ஸ்ரீ குலசேகர ஆழ்வார் 'பெருமாள் திருமொழி' என்கிற திவ்யப் பிரபந்தத்தை அருளியிருக்கிறார். அதில் பத்தாம் திருமொழியில் ராமாயணத்தைப் பத்துப் பாசுரங்களில் பாடியிருக்கிறார். அந்தப் பகுதியே 'ஸ்ரீ ராமாயண சங்க்ரஹம்' எனப்படுகிறது.

அத்யாத்ம இராமாயணம் - சிவன்-சக்தி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பின்புலமாகக் கொண்டு இந்த ராமாயணம் அமைந்துள்ளது. வால்மீகி ராமாயணத்தில் ராமனின் இறைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல், ராமனை மானுடனாகவே வால்மீகி காட்டியிருப்பார். ஆனால் அத்யாத்ம இராமாயணத்திலோ, ராமர் பரம்பொருளாகவே காட்சி தருவார். பிற்காலத்தில் வந்த துளசிதாசரின் ராமாயணத்தில், அத்யாத்ம ராமாயணத்தின் சாயலைக் காணலாம்.

ராமாயண சாரத்தை சங்கீதத்திலும் ராகமாலிகையாகப் பலர் பாடியிருக்கிறார்கள். ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் 'பாவயாமி ரகுராமம்', அருணாசலக் கவிராயரின் 'எனக்குன்னிருபதம் நினைக்க வரமருள்வாய் ஸ்ரீ ராமசந்த்ர' என்ற கீர்த்தனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரும், சௌராஷ்ட்ர ராகத்தில், ராமாயணத்தில் வரும் இருபது முக்கிய நிகழ்ச்சிகளை த(ந)ம் கண்முன் நிறுத்தி, அந்தக் காட்சிகளை நான் என்று காண்பேனோ என்று பாடியிருக்கிறார்.

Tuesday, January 22, 2008

நான் பேச்சிலர் இல்லை, பிரம்மச்சாரி!

நான் பேச்சிலர் இல்லை, பிரம்மச்சாரி!
- டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

நேற்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை சென்னை நாரத கான சபாவில் இணைந்து நாம் 99 என்ற அமைப்பு, சிறகு பவுண்டேஷன் (SIRAKU – Skills and Income for Rural Aspirants and Knowledge Unlimited) மற்றும் சியோஸாவுடன் ((CIOSA – Confederation of Indian Organizations for Service & Advocacy) இணைந்து தனது தொடக்க விழாவைக் கொண்டாடியது.

இவ்விழாவின் முக்கிய ஹைலைட்டே முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை ஒரு மணிநேர குறும்படமாக எடுத்து அதை குறுந்தகடாக வெளியிட்ட நிகழ்வுதான்.

இந்த ஒரு மணிநேர குறும்படம் இரண்டரை ஆண்டுகள் உழைப்பின் விளைவு என்று அதை இயக்கிய இயக்குநர் பி. தனபால் பேசுகையில் குறிப்பிட்டார்.

`100 இளைஞர்களை என் வசம் தாருங்கள். எழுச்சிமிக்க இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்' என சுவாமி விவேகானந்தர் கூறியது அனைவருக்கும் நினைவு இருக்கும். அதேபோன்று `வளமான பாரதம் காண அனைவரும் கனவு காணுங்கள்’ என அப்துல் கலாம் கூறியதை செயல்படுத்தும் முகமாக இந்த இணைந்து நாம் 99 அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதை இந்த விழாவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

இந்த விழாவுக்கு திரையுலகப் பிதாமகரான இயக்குநர் திலகம் கே. பாலச்சந்தரும் வந்திருந்து குறுந்தகடை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் பேச்சின் நிறைவாக அப்தும் கலாமை பேச்சிலர் என்று கூறி பேசி முடித்தார்.

அடுத்துப் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் “நான் பேச்சிலர் அல்ல, பிரம்மச்சாரி’ என ஆரம்பித்து, “இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது’ எனக்கூறி தொடர்ந்து பேசினார்.

`எ லிட்டில் ட்ரீம்’ என்ற அந்தக் குறுந்தகட்டில் இருந்து ஒரு பகுதியை நிகழ்ச்சியின் இடையே காண்பித்தார்கள். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறைக் காணவிரும்புவர்களுக்கு இந்த சிடி (குறுந்தகடு) உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான்.

இந்தக் குறுந்தகடு `A Little Dream’ – A Life Documentary Film on Dr. APJ Abdul Kalam என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த சிடி அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.

Friday, January 11, 2008

கடவுளைத் தேடி...

விவேகானந்தரின் பிறந்த தினம் - ஜனவரி 12.

சுவாமி விவேகானந்தர் என்றவுடனேயே நம் எல்லோருடைய நினைவுக்கும் வருவது அவரது சிகாகோ சொற்பொழிவுகள்தான்! மேலும் அவரை மகான் என்றும், தேசபக்தர் என்று மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு கவிஞராகவும் இயங்கியிருக்கிறார் என்பது அவரை அறிந்த ஒரு சிலருக்கே தெரியும்.

சுவாமி விவேகானந்தரின் கவிதைகளை ‘கடவுளைத் தேடி‘ என அழகுதமிழில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் கவிதைகளை அழகுதமிழில் சுவைபட மொழிமாற்றம் செய்திருப்பவர் திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்கள்.

சுவாமி விவேகானந்தரின் வேதாந்தச் சொற்பொழிவுகளையும் வாழ்க்கை வரலாறையும் படித்தவர்கள் ஒரு மாறுதலுக்கு அவரது கவிதைகளையும் அறிந்துகொள்ளட்டுமே என்று அவரது இந்த பிறந்த தினத்தில் தோன்றியதால், உங்கள் பார்வைக்கு ஒரு சில கவிதைகளை மட்டும் அப்புத்தகத்தில் இருந்து எடுத்துத் தந்திருக்கிறேன்.


என் ஆன்மாவுக்கு!

நிகழ்காலம் பெருங்கேடு
நிறைந்தது வாய்த் தெரிந்தாலும்
வகையற்ற வல்லிருளாய்
வருங்காலம் தோன்றிடினும்

உளஉறுதி கொண்டவனே!
உன்வாழ்நாள் பிணைப்பதனை
விலக்கிவிட்டுப் போகாமல்
விரும்பித் தொடர்ந்திடுக!

உன்னோடு நான்முன்னம்
உயர்மலையும் பள்ளத்தும்
நன்று நடைதொடங்கும்
நாளில்யுகம் தோன்றியது!

வற்றாப் பெருங்கடலில்
வழக்கத்தின் மாறாக
உற்ற இழைவுடனே
ஒரு பயணம் நீசெய்து

முன்னர் மனப்போக்கை
முறையாய் அறிவித்தாய்
என்னில் எனக்கருகே
இருந்திட்டாய் பலமுறைகள்!

என் துடிப்பை அப்படியே
எதிரொலிப்பாய் - உன்னுடைய
எண்ணங்கள் துல்லியமாய்
எழில்விரித்து நின்றாலும்

இப்போது பிரிவுற்று
இருவருமே செல்வதுவோ?
செப்பிடுக என்பால்நீ
சிறந்த பதிவாளா!

உயர்நட்பு நம்பிக்கை
உன்னிடத்தில் உள்ளனவே!
துயர்நல்கும் எண்ணங்கள்
தோன்றுங்கால் நீதோன்றி

எச்சரிக்கை செய்கின்றாய்
என்றாலும் நானதனைத்
துச்சமென எறிந்தன்றோ,
தொடர்கின்றேன் வழக்கம்போல்!



கிருஷ்ணா... என்னை விட்டுவிடு!

அன்பு நண்பனே கிருஷ்ணனே!
ஆற்றுக் கென்றனைப் போகவிடு!
இன்றுநான் நிச்சயம் செல்லவேண்டும்;
என்னைநீ உடனே விட்டுவிடு!

ஏற்கென வேநான் உனக்கடிமை
என்னிடம் ஏனோ உன் குறும்பு!
என்றன் தோழனே என்னைவிடு
இன்று நான் உறுதியாய்ச் செல்லவேண்டும்.

என்றன் குடத்தில் யமுனையின்நீர்
எடுத்து நிரப்பி வரவேண்டும்.
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்!
இனிய நண்பனே! என்னைவிடு!



சமாதி

சூரியன் இல்லை சந்திரன் இல்லை
சுடரும் ஒளியும் மறைந்ததுவே!
பாருல கத்தின் சாயலை ஒத்துப்
பரந்த வெளியில் மிதந்ததுவே!

உள்முக மொடுங்கிய உளத்தின் வெறுமையில்
ஓடும் அகிலம் மிதக்கிறதே!
துள்ளி எழும்பிடும்; மிதக்கும்; அமிழ்வுறும்;
தொடரும் மறுபடி ‘நான்‘ அதனில்!

மெல்லவே மெல்லவே சாயைகள் பற்பல
மீண்டன மூலக் கருப்பையுளே!
‘உள்ளேன் நான், உள்ளேன் நான்‘ எனும் நீர் ஓட்டமே
ஓடிய தேதொரு முடிவின்றி!

ஒழுகலும் நின்றிட வெறுமையுள் வெறுமையாய்
உலகம் அடங்கிக் கலந்ததுவே!
மொழிவதும் இல்லை, நினைப்பதும் இல்லை
முற்றும் உணர்பவன் செயல்புரிவான்.